Wednesday, May 25, 2011

"என் இனிய நல்லவா..!"

"ஒழுக்கத்திற்கான உன் வரையறை என்ன?" என்றாள்.

 

"பின்னாளில் எண்ணி வருந்தும் எதையும் இந்நாளில் செய்யாதிருப்பது!" என்றேன்.

 

"என் இனிய நல்லவனே!" என்று கூறிக்கொண்டே..

கன்னங்கள் இரண்டையும் கைகளால் பிடித்து..

செல்லமாய் இழுத்து.. மெல்லமாய் தலையில் இடித்து..

மூக்கு நுனிகள் உரசி.. நொடிமுத்தம் தந்தாள் உதட்டில்!!

 

கண்மூடினேன்...

 

அவள் வாசம்.. சுவாசம்.. ஸ்பரிசம்.. 

அத்தனையும் ஒரு சேர உள்ளிழுத்தேன்..!

அந்த நொடியை.. நொடிகளாய் நீட்டினேன்..!

அவளோடு லயித்தேன்.. அகத்தில் தியானித்தேன்..!!

 

விழிக்கையில்..

 

சிரிக்கும் கண்களும்.. துடிக்கும் உதடுமாய்..

நாணம் துணைகொண்டு.. நகர்ந்திருந்தாள் சில அடிகள்..

தீண்டி விலகிய தென்றலாய்.. 

முகம் பட்டு நழுவுகிற மென்பட்டுத் துகிலாய்..

பட்டுச் சிறகசைக்கும் பறவையாய்..காற்றோடு 

நளினமாய் நகர்ந்துகொண்டிருந்தாள்.. என் தேவதை..!

No comments: