Tuesday, December 22, 2009

குருட்டு யாசகன்..!

இளங்காலை...இரைச்சலோடு சாலை..!

இதமாய் பாடிக்கொண்டேயொரு குருட்டு யாசகன்..!

யாருமில்லாத சாலையில் கர்ணர்களுக்காக துதித்தான்..!

யாருமேயில்லையே என வருந்திக்கொண்டே நானும்

கடந்தேன்..அவசரமாய் அலுவலகத்திற்கு...

யாரையும் குறை சொல்லத் தேவையில்லை..!!

இயற்கையின் நியதிக்குள்ளே தான்

இத்தனையும் நடந்துகொண்டிருக்கிறது..!! இத்தனையும்..!!

Wednesday, October 07, 2009

தாரையால் நனைகிறேன்..!



மழைபெய்து ஓய்ந்திருந்தது..!

அவளுக்காக காத்திருந்தேன்..!

குளித்த ஈரத்தோடு வந்தாள் - அந்த

வாசத்தில் வசமிழந்தேன்..!

சட்டென அருகே வந்து

வேகமாய் தலையசைத்து

கேசத்து நீர்த்திவளைகளால்

பூமிக்குக் கொணர்ந்தாள்..!

மழைமெழுகிய சாலைகள்..!

கைகோர்த்து நடந்தோம்..!

சட்டென தேங்கினாள்..! - நான்

எதார்த்தமாய் நடந்தேன்..!

வேகமாய் பின்னிருந்து வந்து - அந்த

வேய்களின் கிளையசைத்து ஓடினாள்..!

தாரையால் நனைகிறேன்..! - தாமதமாய்

வந்திறங்கிய தாரையால் நனைகிறேன்..!

இன்னுமொருமுறை அவள் ஈரதேகம்

தேகத்து வாசத்தோடுகேசத்து

நீரெலாம் நினைவுக்கு வந்தகன்றது..!

கோபித்து..புன்னகைத்து..கட்டியணைத்து..

கொஞ்சம் அவளையும் நனைத்தேன் - காதலால்..!

Wednesday, September 09, 2009

சொல்லாமல்...

 

சிறு சண்டை சிற்றுண்டியின் போது...

அதற்க்குப்பின் அவள் பேசவில்லை..!

வழக்கமான செயல்கள் செய்தாள்..!

வாஞ்சை இல்லாதவள் போல் வழியனுப்பினாள்..!

"சாயங்காலம்..." என பேச்செடுத்தாள்..!

என் கண்கள் பார்த்து தானே நிறுத்தினாள்..!

எதிரெ கடுகடுவென்றிருந்து போகும்

வழியெலாம் புன்னகைத்து நகர்ந்தேன்..!

 

வழக்கத்திற்கு மாராய் சீக்கிரம் வீடு வந்தென்..!

வாங்கிய மல்லிகையை கோபத்தோடு கொடுத்தேன்..!

கோபம் குறையாதவளாய் வாங்கிக் கொண்டாள்..!

"கிளம்பு..! கோயிலுக்கு போகலாம்..!" என்றேன்..!

புரியாதவாய் பார்வையில் ஒரு கேள்வி..!

"காலையின் நீதானே.." என்பதாய் நானொரு பார்வை..!

உதடுகள் துடித்தன.. அது

உள்ளூர புன்னகை உதித்தலின் அறிகுறி..!

புரிதலை அதற்கு மேல் மறைக்க முடியாமல்

பொய்க்கோபம் தோற்றது..!

நானும் ஒரு சிறு புன்னகை தந்தேன்..

"இது கூட அறியாதிருந்தால் இத்தனை காலம்

உன்னோடு இருந்ததின் பொருளென்ன?" என்பதாய்...

கலாச்சார கட்டுகளுக்கடங்கி..

கட்டியணைத்தாள்..!

கவித்துவமாய் தோள் சாய்ந்தாள்..!

எஞ்சியவை இரவுக்கென்றாள்..!

அத்தனையும் கண்களால் மட்டும்..

 

இப்படியே சொல்லாமல் சொல்லப்படுகின்றன

சில நூறு வார்த்தைகள்..!

Saturday, May 30, 2009

நீ!

மறக்க நினைக்கையில்

     நகைக்க மலரும் முகமலர் நீ!

இதயம் மறைந்ததாய்

    தகிக்க உணரும் உயிர்வலி நீ!

ஒரு கிராமத்துக் காலை..!

"டேய் கருப்பா..! முனியனை கூட்டிக்கிட்டு மாட்டெல்லாம் குளியாட்டி கூட்டியாடா..!" பின்வாசலிலிருந்து வந்த சத்தம் கேட்டு விழித்தான் கருப்பன்..! யாரும் தண்ணீர் ஊற்றாமலேயே பளிச்சென தண்ணீர் அடித்தது போல் சட்டென எழுந்திருந்தான். உள்ளிருந்து வந்த அந்த குரலுக்கு அவ்வளவு சக்தி அவனை பொறுத்தமட்டில்.

 

இவ்வளவு நேரம் அவனை அடித்து எழுப்ப முயன்று தோற்ற சூரியனை.. சோம்பல் முறித்தவண்ணம் மெல்ல நோக்கினான்.

         "த்து..உன்னை எழுப்ப சொன்னா, இந்த மேகத்து சேலைல மூஞ்சிய ஒளிச்சுக்கிட்டு இருக்க..! போடாங்...!"  அடுத்த வார்த்தை கேட்க பயந்து கரும் மேகம் ஒன்றின் பின் ஒளிந்தான் கதிரவன்.

 

"அதான் வெயில் அதிகமில்லையே பொறகேன் குளியாட்ட சொல்லுற..!" சத்தமாய் கேட்டான்.

 

"வெட்கங்கெட்ட தெம்மாளி..!, ஒரு வாரமா குளியாட்டாம கடக்கு. கசப்பு கிசப்பு வந்து தொலையுண்டா! வெக்காலமா இருக்கா! எந்திருச்சியா இல்ல நான் அங்க வரணுமா?" - என்றாள், இம்முறை கொஞ்சம் சத்தமாய்!

 

"இந்த கெளவிக்கு வேற வேலை இல்ல.." முணுமுணுத்துக்கொண்டே கைலியை கட்டிக்கொண்டான்.

 

"நாச்சாயின்னு பேர் வச்சதுக்கு நச்சரிப்புன்னு வச்சு தொலைஞ்சானா உங்கப்பன்!" பக்கத்தில் இருப்பவனுக்கே புரியாத அளவுக்கு உதடு பிரியாமல் முணுமுணுத்தான்.

 

"இருடி. போய் அம்மாச்சிக்கிட்ட சொல்றேன்.." சொல்லிக்கொண்டே வாசலை தாண்டி உள்ளே ஓடினான் முனியன்.

 

சட்டென நகர்ந்து, காலரை பிடித்து இழுத்தான் கருப்பன். "இவ்வ்வ்.. இந்தா இதையும் சேத்து சொல்லு" சொல்லிக்கொண்டே பொறடியில் மெல்லமாய் ஒரு போடு போட்டான்.

 

சிணுக்கி கொண்டே உள்ளே போனான் முனியன். "அம்மாச்சி..! அண்ணன் அடிச்சுபுட்டான்.. ம்ம் ஹும் ஹுச்" சொல்லிக்கொண்டே பின்வாசல் படியில் போய் உட்கார்ந்து கொண்டான்.

 

"ம் ..வந்துட்டியா. நீலிக்கு கண்ணீர் நெத்தியிலயாம். மாட்ட குளியாட்டி மேய ஓட்டி விட்டு  வாங்கடான்னா.. எவனாவது நகர்ரானா பாரு.  அம்மி மேல காப்பி இருக்கு. எடுத்து குடிச்சிட்டு, அவன்ட்ட ஒன்ன போய் குடு. அவன் கடக்குறான் காட்டுப்பய. அழுவாம போடி கண்ணு. மணியாச்சு .. அப்பறம் வெயில் வந்துரும். "