Tuesday, December 28, 2010

உனக்காக மட்டும்....

முன்பெல்லாம்...
"உனக்காக மட்டுமே இதைச் செய்கிறேன்" என்று
எனக்காக மட்டும் செய்தாள்.. சிலவற்றை..!!
பின் ஒரு நாள்...
சண்டையிட்டாள்..! பேச மறுத்தாள்..! - அவள்
கோபம் தணிந்தும்..
தணியாதிருந்தேன் நான்..!
தனியாய் இருந்தேன் நான்..!
எனக்காக மட்டும் செய்யும் ஒன்றை செய்து...
எனக்காக காத்திருந்தாள்..!
அவளுக்காக தணிந்தேன்.. புன்னகைத்து...
அவளுக்காக மட்டும்..!

Sunday, July 11, 2010

என் வரலாறு..!

என் வரலாறு இப்படியும் வரையறுக்கப்படலாம்..!
"அவளுக்கு முன்"
"அவளுக்குப் பின்"
"இடையே சிலமுறை நான் சிலுவையில் அறையப்பட்ட காலம்"

Wednesday, June 30, 2010

சடலம் எச்சம்..!

சுடச்சுட சொல்லெறிந்த உன்னை 
சாடவும் தெரிந்தறியா தென்மனம் 
சாகவும் துணிந்ததடி..! - சடலம் எச்சம்..!

Sunday, June 20, 2010

தருணம் எதுவாயினும்...

தருணம் எதுவாயினும்... மகிழ மட்டும் அறிந்திருந்தேன்..!
நீ வந்து போனாய்..! ஏதேதோ தந்துவிட்டு போனாய்..!
இப்போதெல்லாம்...
மகிழுந்தருணங்களில் வருந்துகிறேன்...!
"நீயருகில் இல்லையே" என்று...
"நீயருகில் இல்லையே" என்று...
வருந்துந் தருணங்களில் மகிழவும் செய்கிறேன்..!
என்ன மாயம் செய்தாயடி?!

Saturday, June 19, 2010

நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்..!

நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்..!
நீ செய்த குறும்புகள்..! நீ பார்த்த பார்வைகள்..!
நின் சொற்கள் - அவை தொனித்த தொனிகள்..!
கலங்கிய நெஞ்சம்... ததும்பிய கண்ணீர்..!
சில நேரம் தழுதழுத்த குரல்..
பலவிதமாய் நீ உடுத்திய உடைகள்..
பரபரப்பாய் நாம் கடத்திய பொழுதுகள்..
அத்தனையும் ஒருசேர அழகழகாய்..
சிந்தையெல்லாம் ஆக்கிரமித்த நீ..!
சிரிக்கிறேன்.. அழுகிறேன்.. சிந்திக்கிறேன்
நிச்சயமாய் நின் நினைவுகளால்...
அலைக்கழிக்கப்படுகிறேன்... 
அமுதே! எனதழகிய விஷமே..!

Thursday, June 17, 2010

பேசாமலேயே பேசுகிறோம்...!

"இனி நாம் பேச வேண்டாம்" என்றாள்..!
"சரி" என்றேன்..! "காரணம்?!"
"காதலால்... ஆதலால்...!!" என்றாள்..!
"கட்டளைகள் மறுப்பனோ?!" என்றேன்..!
புரிந்து புன்னகைத்தோம் இருவரும் ....
இப்பொழுதெல்லாம்.....
"பேசாமலேயே பேசுகிறோம்...!"

Sunday, June 13, 2010

இனிஅவள் தூரமென்ற உணர்வொலி..!

இதுவரை உணரவில்லை இந்த வலியும்..! 

இதுவரை கிடைக்கவில்லை எந்த சொல்லும்..!

இனியவள் தந்துவிட்ட இன்ப வலி..!

இனிஅவள்  தூரமென்ற உணர்வொலி..!

அழவில்லை.. இருந்தும் ஏதோ... சின்ன பயம்..!

அளவில்லை.. கொஞ்சம் நானும்... உந்தன் வயம்..!

தொடரட்டும்.. இதன் எல்லை வரை..

துடிக்கட்டும்.. இதயம் அது வரை......மிதமாய்..!

புரியாது புன்னகைக்கிறோம்..!

உதற முயன்றேன் பலமுறை..! அழுது 

அருகே நெருங்கினாள் இதுவரை..!

கட்டுக்கள் உடைக்குமோ நம்சிநேகம்?! - என 

சட்டென விலக யத்தனிக்கிறோம்..!!

தெளிவு பிறந்ததென்று மகிழ்வதோ?!

பிரிவு வருதென்று அழுவதோ?!

புரியாது புன்னகைக்கிறோம்..! - இனி 

அழுவதில்லை என்ற ஒப்பந்தத்தால்....

Saturday, May 22, 2010

வலியோடு இதயம்..!

வலியோடு இதயம் கனத்து... 
கனல்போல் இருளில் வானம்..! 
என்னோடு அழுதது மழையாய்..! 
அழுதகண்ணீர் யாருமறியாமல்.. 
உறக்கத்திலும் உதிர்ந்துகொண்டே.. 
இதோ விடிந்தது...புதுப்பொழுது..! 
இனிதாய் வெளிச்சம் கொணர்ந்து..! 
வாழ்க்கை புரிந்தது எனக்கு..! 
எழுந்து இயங்கினேன் புதுத்தெம்போடு.. 
என்னோடு துணைக்கு இயற்கை வந்தது..!

Wednesday, May 12, 2010

போடி..! இனி என் கண்முன் வராதே..!

"போடி..! இனி என் கண்முன் வராதே..!" - அதோ 
என் கனவுதேவதை கண்ணீர் வடிக்கிறாள்..!
கண்கள் கசக்கி..கவிதையாய் உனைப்போல் முகஞ்சுழித்து..
என்னோடு ஊடுகிறாள்..! உன்மீது பொறாமையால்..!
உன்பாதி பண்புகள் திருடி அவளுக்கு கொடுத்து..
என்பாதி உனைவிட்டு "வரமாட்டேன்" என்றால்..
வேறென்ன செய்வாள் அவள்?! "பாவம்..!!"

Friday, April 30, 2010

நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!

நீ நிராகரித்த பொழுதுகள் - நிஜமல்லாதிருக்கட்டும் என ஒரு சிற்றாசை..!

நீ வாராத நாட்கள் - நிறமற்று கடந்ததோ என ஒரு பிரம்மை..!

நீ புன்னகைத்த பொழுதுகள் - நிரந்தரமாக நின்றிருக்க ஒரு விழைவு..!

நாம் சண்டையிட்ட கணங்கள் - சரிதையில் வரையப்பட்ட நற்சிற்பங்கள்..!

எப்படி பார்த்தாலும்... நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!


Friday, April 23, 2010

உன் ரசிகன்...!

இதுவரை உணராத உணர்வுகள்..!
இதுவரை அறியாத முகபாவங்கள்..!
அடிக்கடி நினைந்து அத்தனையும் ரசிக்கிறேன்..!
எனக்குள்ளே நானே இதமாய் புன்னகைக்கிறேன்..!
நிச்சயமாய் நான் உன் "ரசிகன்" தானடி..!

மாயா..!

ஒவ்வொரு கணமும் புதுமையாய்..!
ஒவ்வொரு நொடியும் புதிராய்..!
ஒருசேர எனை மாய்க்கும் அவளுக்கு...
"மாயா" சரியான பெயர்தான்..!

Monday, April 19, 2010

மழை நனைத்த மண்ணவள்..!

மனங்குழைய தனிமையில் பயணித்தவென்னோடு 
மழை நனைத்த மண்ணவள் துணைக்கு வந்தாள்..! 
பெண்ணின் போதை என்னிலும் உண்டென்றாள்..! 
மழைமது அருந்தி மறுமுறை பூத்தாள்..! 
மலர்ந்ததின் மணமது மனமதை மயக்க.. 
மஞ்சள் இளவேனிற் துளிரெலாம் உடுத்தி.. 
பற்பல பசுமையால் என்பாழ்மனம் கெடுத்தாள்..! 
இந்த நொடியும் நீளாதா என்றெனை ஏங்க வைத்தாள்..! 
இந்த நொடியில் இறப்பதும் சுகமென மாயத்தாள்..! 
மண்ணவள் மணமதை அழகுடன்… 
கிறங்கி கைவிரித்து மீண்டும் சுகித்தேன்..! 
என் "சொர்க்கம் நீயடி" என்றே..!

Friday, April 16, 2010

விதவிதமாய் ராட்டினங்கள்..!

விதவிதமாய் ராட்டினங்கள்..!

விளையாட்டாய் ஏறியமர்ந்தேன்..!

விந்தையாய் சுற்றியது..! ஏறியதா? இறங்கியதா?

சுழன்றதா? நின்றதா? சுழலுக்குள் எதிர்சுழல் செய்ததா?

ஏதும் புரியாதிருந்தது..! 

பயந்தேனா? பற்கள் கடுமையாய் கடிபட்டனவா?

மகிழ்ந்தேனா? மனம் கொஞ்சம் சிறகடித்ததா?

இறந்தனா? இதயம் அடிக்கடி திடுக்கிட்டதா? - எனை 

இழந்தனா?  இமைகள் அனிச்சையாய் மூடியதா?

விளங்கி தெளிவதற்க்குள் விருட்டென நின்றது..!

மழலையானதில் மகிழ்ந்து இறங்கினேன்..! - மீண்டும் 

ஏறுவனோ என்பதும் எட்டவில்லை என் சிற்றறிவிற்கு..!

Thursday, April 08, 2010

அவள் வயப்பட்ட மழலையாய் நான்..!

கடகடவென சிறகடித்தாள்..!
துள்ளித் தாவினாள் இங்குமங்கும்..!
வெள்ளை உடுத்தவில்லை இவள் தேவதையுமில்லை..!
வெறித்துப் பார்க்கவில்லை இவள் வேங்கையுமில்லை..!
மெல்ல நெருங்கினேன்.. மேனிசிலிர்த்து நகர்ந்தாள்..!
மீண்டும் நெருங்குவனோ என்ற மிரட்சியில் அவள்..!
இத்தனை பீடிகைக்கு மயங்க வேண்டாம்..!
எனை விட்டுச் சிறகடித்துப் பறந்த
அழகு "சிட்டுக்குருவி" தான் அவள்..!
துரத்தித் தோற்றுக் கொண்டிருக்கிறேன்..!
அறியாமல் அவள் வயப்பட்ட மழலையாய் நான்..!

Wednesday, January 06, 2010

அழாமல் அழுகிறேன்..!

"விழாமல் விழுந்தேன்..! 

எழாமல் எழுந்தேன்..!

அழாமல் அழுகிறேன்..!"

என்மொழி அறிந்தவருக்கு இதன் பொருள் புரியாது..!

இதன் பொருள் அறிந்தவளுக்கு என்மொழி தெரியாது!

அட! சுவாரஸ்யமாய்த் தான் நகர்கிறது...

இந்த அயல் தேசத்து வாழ்க்கையும்..!!